சென்னை:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் காந்தியை சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் கோட்சே என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்,  ‘தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள் என்று பேசியவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

மேலும் இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள் ளார்.

கமல்ஹாசனின் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள் என்பது உண்மைதான். அதில் சந்தேகமே இல்லை, அதே போல் உண்மையான இந்து உள்பட எந்த மதத்தினர்களும் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள் என்று ஏன் கமல் சொல்லவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் ஏற்கனவே ஹேராம் என்ற ஒரு படத்தை தயாரித்து அதில் இந்துமத வாதியாக நடித்து கல்லா கட்டியவர். சமீப காலமாக நாத்திகம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தும், விஞ்ஞான வளர்ச்சி குறித்து ஏதாவது பேசி தனது அதிமேதாவி தனத்தைக்காட்டி சர்ச்சையில் சிக்குவதையும் வாடிக்கையாக்கி வருகிறார்.