சென்னை: சுதந்திர தினவிழா ஒத்திகை நடைபெறுவதையொட்டி, சென்னை கடற்கரை காமராஜர்-ராஜாஜி சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுகிறார். இதையொட்டி, அந்த பகுதியில் காவல்துறையினரின் அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, ஆகஸ்டு  4, 10, 13-ந் தேதி ஆகிய நாட்களில், கடற்கரை சாலையில்  சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு சாா்பில் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினவிழா, சென்னை தலைமைச் செயலகத்தில் வழக்கம்போல கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஆகஸ்ட் 4, 10, 13-ந் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒத்திகை நிகழ்ச்சியால், அந்த 3 நாட்களிலும் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த நேரத்தில் நேப்பியா் பாலத்தில் இருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.

காமராஜா் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

அதேபோல், பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.