ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூடுவதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் பரவியதன் காரணமாக அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக் கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மெரினாவில் ஒரு வார காலமாக தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது. எனினும் கடைசி நாள் போராட்டத்தின்போது தடியடி, கலவரம் நடந்து பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மெரினா..

இந்த நிலையில், நெடுவாசலில் உட்பட பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பதத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரியும் போராட்டம் நடத்த இன்று சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூட இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து மெரினா கடற்கரையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.