சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் ஆகிய 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. இவர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். , திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு சொந்தமானவர்கள் உள்ள சென்னை திருவண்ணாமலை, விழுப்புரம்  கரூர், கோவை உள்பட பல மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டு பஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட கார் மற்றும் வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன், 500-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலையில் உள்ள  கல்வி நிறுவன வளாகத்தில்  மட்டும் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிகாலை சுமார் 6 மணியளவில் நுழைந்தனர். வரி ஏய்ப்பு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், அங்குள்ள கம்ப்யூட்டர்ரையும் ஆய்வு செய்து, அதில் ஏதேனும் ஆவணங்கள் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது என ஆராய்ந்து வருகின்றனர்.  தொடர்ந்த, அமைச்சர் எ.வ.வேலு, மகன் குமரனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதேபோல், பொதுப்பணித்துறையில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்த அப்பாசாமி மற்றும் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனங் களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி தினகர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிருஷ்ணன் கோட்டூர்புரத்தில் வசித்து வரும் நிலையில், அவர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இதேபோன்று அப்பாசாமி குழுமத்திற்கு சொந்தமான ரெசிடென்சி ஹோட்டலிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாடிக்கையாளர்களை போன்று ஒரு நாள் முன்னதாகவே இந்த ஹோட்டலில் வந்து தங்கியிருந்த வருமாவரித்துறை அதிகாரிகள் காலையில் சோதனையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில், அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் அமித் வீட்டிலும், அண்ணா நகரில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் ரெட்டி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், கோவையில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஸ்ரீராமின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த திமுக பிரமுகரும், எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளருமான எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரத்தில் உள்ள அனெக்ஸ் பேப்ரிக்ஸ் நிறுவனம் மற்றும் ஒரு நிதி நிறுவனம் என மூன்று இடங்களில் வருமான வரித்துறை சோதனை நீடித்து வருகிறது.

இந்த சோதனையில்,  சோதனையில், கிண்டி நெடுஞ்சாலை துறை விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளது.

ஏற்கனவே திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரது வரிசையில் அமைச்சர் எ.வ.வேலு மீதும் வருமான வரித் துறை சோதனையில் சிக்கியதால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2021ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் திருவண்ணாமலையில் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பா அல்லது வரி ஏய்ப்பா என்பது சோதனையின் முடிவில் தெரியவரும்.