சென்னை:

சென்னை அடையாறு பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக  நடைபெற்று வந்த சோதனை காரணமாக, அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்வினி பிஷரிஷ் என்ற இறால் ஏற்றுமதி செய்து வரும் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு  சொந்தமாக தூத்துக்குடி, நாகை உள்பட பல பகுதிகளில்  கிளைகள் உள்ளது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை  அடையாறு காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை யில், அதிகாரிகள் சில ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நிறுவனத்தில் செந்தில் குமார் என்ற அலுவலக ஊழியரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  அவர் அலுவலகத்திலேயே கடந்த சில நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், மனமுடைந்த செந்தில் கமார்  திடீரென அலுவலகத்தின் மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போலீசார், செந்தில் குமாரின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையினால் ஏற்பட்ட மன உளைச்சலால், அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.