டில்லி:

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.லெனின், பெரியார் சிலை சேதப்படுத்தும் செயலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

எனினும் நேற்று தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே கிராமத்தில் இருந்த பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் அந்த சிலை அவசர அவசரமாக புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை பாஜக, ஆர்எஸ்எஸ் ஊக்குவித்தது. இதன் மூலம் பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள், தலித் மக்களுக்காக போராடியவர்களின் சிலைகளை சேதப்படுத்த அக்கட்சியினரின் தொண்டர்களுக்கு அனுமதி வழங்கியது போல் ஆகிவிட்டது. அதன் ஒரு கட்டமாக தான் தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.