ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படை (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) முகாம் மீது நடத்திய மூவரில் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின்  தளபதி நூர் முகமது டன்ட்ரே, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பயங்கரவாதிகள் பழிக்குப்பழி தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் அதிகாலை, காஷ்மீர் மாநிலம்  புலவாமா மாவட்டம் அவந்திப்போராவில் லேத்போரா என்ற இடத்தில் அமைந்துள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) முகாம் மீது ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள்  திடீர் தாக்குதலில்  ஈடுபட்டனர்.

இதில் ஒரு வீர்ர் பலியானார். இதையடுத்து உடனடியாக மத்திய ஆயுதப்படை காவலர்கள் எதிர்தாக்குதலுக்கு தயாரானார்கள். அதற்குள்,  மூன்று  பயங்கரவாதிகளும் முகாமுக்குள் புகுந்தனர்.

இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் சண்டை நடந்தது.  இதில் மேலும் 4 வீரர்கள் பலியானார்கள். 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில்  2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இன்னொரு பயங்கரவாதியை வீழ்த்த நேற்றும் சண்டை நீடித்தது. இறுதியில், அந்த பயங்கரவாதியும் கொல்லப்பட்டார்.  இந்த சண்டை 36 மணி நேரம் நீடித்தது.

நேற்று முன்தினம் பலியான 2 பயங்கரவாதிகளின் உடல்கள் அன்றைய தினமே கைப்பற்றப்பட்டு, அவர்களது அடையாளமும் கண்டறியப்பட்டது.

ஒருவர் பெயர் மன்சூர் பாபா (வயது 22). புலவாமா மாவட்டம் துருப்கம் பகுதியை சேர்ந்தவர்.   மற்றொருவர் பத்தாம் வகுப்பு மாணவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அவர்  பெயர் பர்தீன் அகமது காண்டே. அவருக்கு வயது 16. திரால் பகுதியை சேர்ந்த அவர்,  கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வரை, பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

அதன்பிறகு பயங்கரவாதிகள் தொடர்பு ஏற்பட்டு, ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்.  அவரது தந்தை ஒரு போலீஸ்காரர். அவர், தலைநகர் ஸ்ரீநகரில், பணியாற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானிக்கும் திரால்தான் சொந்த ஊர் ஆகும்.

மத்திய ஆயுதப்படை காவலர்களுடனான சண்டையில் நேற்று பலியான மூன்றாவது பயங்கரவாதியின் உடலும் கைப்பற்றப்பட்டது. ஆனால், அவரைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை.