சென்னை

சென்னை நகரில் ஆக்கிரமிப்பால் 950 நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்,  அதில் காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.   இந்த மனுவைத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி விசாரித்தனர்.

விசாரணையில் நீதிபதிகள் செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.  குழு  தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், காவல் நிலையம் ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது. ஆயினும் இதை மட்டுமே இடிப்பதால் பெரிய மாற்றம் ஏற்படாது.  அந்த இடத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன என்று கூறப்பட்டு இருந்தது.

இதையொட்டி தாமரைக்கேணி நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மீண்டும் அந்த குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நேற்று நீதிபதிகள் முககிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.  அதன்படி “தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. அரசு நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இதுபோல் வனப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  மாநிலத்துக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தேவை என்பதற்காக நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது. ஆகவே, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளது. அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன.   ஆகவே நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.