நடிகை பாவனா பேட்டி-1

பாவனா…. பெயரை கேட்டதும்…. அய்யோ பாவம்…. இந்த பெண்ணையா காரில் கடத்திச்சென்று கொடுமைபடுத்தினார்கள் என ‘உச்’ கொட்டத் தோணும்….

தற்போது அந்த கொடூரமான மனநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  மீண்டிருக்கும் பாவனா மனம் திறந்து கூறிய சுவாரஸ்யமான தகவல்கள்….

அப்போது,  “கேரளாவில் வாழும் எல்லா பெண்களுக்காகவும்  வேண்டி, வெற்றி கிடைக்கும் வரை நான் யுத்தம் செய்வேன். !” இது ஒரு போராட்டம்..   என்று அதிரடி கருத்துக்களை கூறி தம்மை அதிர வைத்தார்.

அவரை காண அவரது இல்லத்துக்கு சென்றோம்.  திருச்சூரை அடுத்த பெரிங்காவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்…

2003 ஜனவரி மாதம். மலையாள சினிமா டைரக்டர் கமல் டைரக்ட் செய்த “நம்மள்” என்ற சினிமா வெளியாகி ஹிட்டாகி ஓடிக்கொண்டிருந்தது. உருட்டு வண்டியில்  தெருவில் சுற்றும்  அழுக்கான் ஆடைகள் அணிந்த “பரிமளம்” என்ற வாயாடி பெண் கேரக்டர் பாவனாவுக்கு.

பாலச்சந்திரனும் , புஷ்பாவும் கார்த்தி என செல்லமாக அழைக்கப்பட்ட கார்த்திகா  என்ற பெண் சினிமாவுக்காக “பாவனா”வாக பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.

திரும்பிப்பார்த்தால் 15 ஆண்டுகள். ஒன்றல்ல, இரண்டல்ல நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான  சினிமாக்கள். எல்லா படங்களிலும் நல்ல நல்ல பெயர் சொல்லும் கேரக்டர்கள்.

எதிர்பாராத ஒரு நாளில் திடீரென பாலசந்திரன் இறந்து போகவே அப்பாவும் சகோதரனும் மனம் வெதும்ப அப்போது சற்று தைரியமாக  இருந்தது பாவனாதான்.

அதன்பின்னர் தொடர்ந்து படங்கள் ஹிட்டாகி மீண்டு வந்தார் பாவனா.

பாவனா எப்படிப்பட்டவர், தைரியசாலியா? கோழையா? பிரச்சனைகளை எதிர்கொள்ள எப்படி தைரியம் வந்தது?

தன்னுடய தைரியமான முடிவால் தன்னை பலவீனப்படுத்தியவர்களை எப்படி ஒன்றுமில்லாத வராக்கினார் என பல கேள்விகள் நம்முள்ளே எழுந்தது… அதுகுறித்து பேசத்தொடங்கினோம்….

 

கொஞ்சநாளா சினிமா தவிர வேறு எந்த நிகழ்ச்சி யிலயும் பாவனாவை பார்க்க முடியுறதே இல்லை..  ஏன் என்னாச்சு.. பத்திரிகைகளிடமிருந்து நீங்க ஒதுங்கி இருக்கிறீங்க?

ம்ம்ம்….  நாலு வருஷமா நான் மீடியா பக்கமே தலைவைச்சுப்படுக்கவில்லை என்பதுதான் உண்மை.  எனக்கு கொஞ்சம் சுதந்திரம் அதிகமா இருந்தா நல்லா இருக்கும்னு நெனைச்சேன்.  வீடு, சினிமா லொக்கேஷன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள்  இவை மட்டுமே என்னுடைய உலகமாக இருந்தது.

நான் பேஸ்புக்கில் கூட கிடையாது. டிவிட்டரில் கணக்கு கிடையாது. மட்டுமில்லாம வேற எந்த சோசியல் மீடியாவுலயும் நான் கிடையாது.

என் பேர்ல உலாவர்ற பேஸ்புக் கணக்குகள்போலியானவை. பேஸ்புக் வெளியான புதிதில் நான் அதில ரொம்ப ஆக்டிவா இருந்தேன். செல்பி எடுத்து போஸ்ட் போடுறோம். பார்க்குறவங்க லைக் செய்யுறாங்க..கமெண்ட் செய்யுறாங்க. இதனால நமக்கு என்ன பயன்? ஒரு பயனும் இல்லை.

சினிமா நல்ல படமா இருந்தா ஓடும். இல்லைன்னா ஓடாது. சில நல்ல திரைப்படங்கள் கூட ஓடுவது இல்லை. ஆனால் சில மோசமான படங்கள் ஓடும்.  அது அதிர்ஷ்டம். என்னுடைய தனிப்பட்ட சுதந்திரமான உலகத்தில் நான்  மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. அது பிறருக்கு தர்ம சங்கடங்கள் ஏற்படுத்தக்கூடாது என்பதில்  நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். பிறருக்காக நான் செய்யும் முக்கியமான காரியமும் அதுதான்.

5 ஆண்டுகளுக்கு முன்புதான் உங்க வருங்கால கணவர் நவீனை பார்த்தீங்கன்னு சொல்றீங்க.  அவர்கூட ஏற்பட்ட நட்பும், காதலும்தான் இவ்வாறு முடிவெடுக்க வைச்சுதா?

இல்லவே இல்லை. முதலாவது கவனிக்க வேண்டியது அவர் அடுத்த வங்க விஷயத்தில் தலை யிடுற ஆள் இல்லை.

அவருக்கு சினிமா தான் எல்லாம். சினிமாவைப்பத்தி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கார். கல்யாணத்துக்கு அப்புறம் சினிமாவுல நடிக்கக்க கூடாதுன்னு ஒண்ணும் எங்கிட்டே சொல்ல வில்லை.

ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் வாழவேண்டும் என்ற தனிப்பட்ட முடிவுக்கள் இருக்கும்தானே. அதன்படிதான் நான் வாழ்கிறேன். அடுத்த வங்க விருப்பத்தின்பேரில் நாம் வாழவேண்டும் என்பது சிரமமானது.  நான் சினிமாவுக்கு வந்து வருஷம்  15 ஆகிவிட்டது.

சிறு வயதில் நமக்கு பல விளையாட்டுகள், புத்தகங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு இருக்கும். வயது ஆக ஆக அதன்பேரில் உள்ள விருப்பங்கள் குறையலாம், கூடலாம். வேறு எதிலாவது ஆசை ஏற்படலாம். என்னுடைய விஷயத்திலும் அப்படித்தான்.

நான் சாதாரண வீட்டில் உள்ள சாதாரண பெண் அவ்ளோதான்.

உங்களோட காதல், கல்யாணம் மேட்டர் ரொம்ப நாளா கிசுகிசுக்கப்பட்டு வந்துச்சே…?

மூணு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகணும்னு நெனைச்சேன். நல்ல சினிமா நிறைய நடிச்சாச்சு. இது போதும்னு நெனைச்சேன். வீட்டுல ஜாதகம் பார்த்தப்ப ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க..ஒரு வருஷம் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்னாங்க. அப்படி நீண்டு போய்கிட்டே இருந்துச்சு.  சினிமாவுக்கு வெளியே சில கனவுகள் என் மனதில் உண்டு. அது இப்போதும் இருக்கிறது.

இரண்டு வருஷம் முன்னாடி கல்யாண தேதி குறிக்கப்பட்ட வேளையில்தான் அப்பாவோட மரணம்.  அப்பாவுக்கு ஒரு வியாதியும் கிடையாது. அவரது  திடீர் மரணம் எங்களை நிலை குலைய வைத்தது. முன் தினம் இரவு 10 மணிவரை டிவி பார்த்துக்கொண்டிருந்தவரை மறுநாள் காலையில் மயக்க நிலையில் பார்த்தால் யாருக்கு அதிர்ச்சி இருக்காது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர் இன்று வருவார் நாளை வருவார் எனகாத்திருந்தோம். அம்மாவிடம் அப்பாவை பார்த்துக்கொள்ளச்சொன்னேன். நான் ஷூட்டிங் போறப்ப வேற யாரையாவது கூட்டிச்செல்கிறேன் என்றேன்.

இந்த நிலையில்தான் இடிபோல் வந்தது அப்பாவின் மரணச்செய்தி. எப்படித்தான் அப்பாவின் மறைவுத்துயரத்தில் இருந்து நான் மீண்டு வந்தேன் என்றே தெரியவில்லை.

அப்பா இறந்ததைத்தொடர்ந்து வாழ்க்கையே பூஜ்யமானதாக ஒரு வலி.  கண்ணை இமை காப்பதுபோல் எங்களைப்பாதுகாத்த அப்பா இல்லாத வேதனையை எப்படி கடந்து வந்தேன் என்பதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

அதுக்கப்புறம் திரும்பவும் கல்யாண நாள் தள்ளிப்போய்க் கொண்டிருந்ததே…?

வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயங்களில் ஒன்றாக திருமண பந்தத்தை நான் நினைக்கிறேன்.  புதிய ஒரு வாழ்க்கைய நாம் துவங்க உள்ளோம். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில்தான் திருமணம் நடத்துவது நல்லது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

அப்பாவின் மறைவுத்துயரம் மனதை அழுத்தினாலும் ஒரு ஆண்டுக்குப்பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தோம் . 2015 செப்டம்பரில் என்னோட அப்பாவின் மரணம். சரியாக ஒரு வருடம்தாண்டி

2016 நவம்பரில் நவீனின் அம்மாவின் கான்சரில் மரணமடைய திருமணம் நீண்டு கொண்டே போனது.  திருமணம் நாள் நீண்டு கொண்டே போனாலும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது எங்களுக்கு திருமணம் செய்து வைத்துக்ககொண்டே இருந்தார்கள்.

‘பாவனா கல்யாணம் செய்தார்… கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை அழுத்தவும். .. பாவனாவுக்கும் தயாரிப்பாளருக்கும் கல்யாணம் ..பாவனாவின் அம்மா கூறினார். உறவினர் கூறினார்’  என்றெல்லாம் எழுதினார்கள்.

இதுதொடர்பாக அன்றைக்கு யாரும் எங்ககிட்டே கேட்காமல் செய்தி பரப்பினாங்க. அந்த செய்தி போடுறதுனால் செய்தி எழுதுறவங்களுக்கும், படிக்கிறவங்களுக்கும் சந்தோஷம்னா அது இருந்துட்டு போகட்டும்னு நாங்க கண்டுக்காம இருந்துட்டோம்.

கிசுகிசுக்கள் வருவதைத்தவிர்ப்பதற்காக, பாவனாவே தன்னுடைய திருமண தகவலை வெளியிட்டிருந்தால் இன்னும் நல்ல இருக்கும்தானே?

முன்னாடி எனக்கொரு காதல் இருந்தது. பல காரணங்க ளால் என்னோட வீட்டுல உள்ளவங்களுக்கு அந்த காதல் விருப்பமில்லாமல் இருந்தது. அந்த காதல் தொடர்பா என்னை வீட்டுல உள்ளவங்க ரொம்ப குற்றம் சொன்னாங்க.

நான் செய்ததுதான் சரின்னு அவங்ககிட்டே நிரூபிக்க ஒண்ணும் போகலை..பின்னர் ரொம்ப யோசிச்சதுக்கப்புறம் அந்த காதல் தப்புன்னு தோணிச்சு..ஆனா அந்த காதல் வேண்டாம்னு என்னை வீட்டுல உள்ளவங்க வற்புறுத்தினாங்க.அந்த காதலுக்கு விடைகொடுத்தேன்.

முதல் காதல் தோல்வியின் கோபத்தை என் வீட்டில் உள்ளவங்க கிட்டே காண்பித்திருக்கேன். வீட்டுல எல்லோரும் சேர்ந்து சாப்பிடுறப்ப அவங்ககூட சேர்ந்து சாப்பிடாம இருக்கிறது.. அவங்க ஜோக் அடிச்சா சிரிக்காம இருக்கிறது, சேர்ந்து இருந்து டிவி பார்க்காமல் இருக்கிறது. உங்களுக்காக நான் என்னோட காதலை துறந்தேன் என்பதை காண்பிக்கிறதுதான் இதுமாதிரியான மனோபாபம் என்ற உணர்ந்தேன்.

அதற்குப்பின்னர்தான் நவீனா?

நவீனுடன் பழகத்துக்கு வந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. முதலில் நாங்க நல்ல நண்பர்களாக இருந்தோம்.  நான் நடித்த ரோமியோ என்ற கன்னட படத்தின் தயாரிப்பாளார் நவீன்.

அவங்களுக்கு சொந்த மாநிலம் ஆந்திரா. நவீனின் அப்பா நேவியில் வேலைபார்த்து வந்தார். அவரது அம்மா ஆசிரியையாக இருந்தார். இதனால் பெங்களூருவில் வசித்து வந்தார்கள்.

“ரோமியோ” படத்தின் கதை சொல்வதற்காக கொச்சிக்கு நவீனும் டைரக்டரும் வந்திருந்தனர். அப்போதுதான் முதல் முதலாக நவீனைப்பார்த்தேன். கதை சொன்னார்கள்..ரொம்ப பிடித்திருந்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அன்றே அவரை நான் புரிந்துகொண்டேன்..

சினிமா சம்பந்தம் இல்லாமல் ஒரு வார்த்தை பேசுவதோ.மெசேஜ் அனுப்புவதோ கிடையாது என்பதை. படித்தவர், பைலட்டாக இருப்பவர், ஏர்போர்சில் யுத்த விமானங்கள் இயக்குபராக வரவேண்டியவர். ஆனால் வீட்டுக்கு ஒரே மகன் அவர் என்பதால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

“ரோமியோ” ஷூட்டிங்கின்போது ஒரு நாள் தாமதமாக நாங்கள் தங்கியிருந்த  ஹோட்டல் அறைக்கு நவீன் வந்தார். அங்கே என்னோட அம்மாகிட்டே அரைமணி நேரம் பேசிகிட்டிருந்தார்.

என்னோட அம்மாவுக்கு மலையாளத்தைத்தவிர வேற எதுவும் தெரியாது. நவீனுக்கு மலையாளம் தவிர வேறு தென்னிந்திய மொழிகள் நன்கு தெரியும். இருந்தும் இரண்டு பேரும் அரை மணி நேரம் பேசிட்டு இருந்தாங்க. எப்படி என்ன பேசுனாங்கன்னு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

நவீன் போனதுக்கப்புறம் அம்மா சொன்னாங்க,”இதுமாதிரியுள்ள ஒரு ஆளைத்தான் கல்யாணம் பண்ணிகிட்டா நீ சந்தோஷமா இருப்பேன்னு தோணுது”ன்னுசொன்னாங்க.

அம்மா அன்னிக்கு அப்படி சொன்னாலும் நான் அதை பெருசா ஒண்ணும் எடுத்துக்கலை. பின்னர் தொடர்ந்து நாட்கள் நண்பர்களாகத்தான் இருந்தோம்.

போனில் பேசுவோம். நவீன் பேசுறது சினிமாவைத்தவிர வேறெதும் இல்லை.  என்கிட்டே பேசுறப்ப எல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்வாரு..

(தொடரும்)