டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து மதியம் 2மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அன்றையதினம்,  ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடந்து வருகிறது.

இந்த அமர்வில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சிகள்   அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட  இந்தியர்கள் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில்  ஈடுபட்டனர்.   இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.

பின்னர் பார்லிமென்ட் இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.  பின்னர் 12 மணிக்கு லோக்சபா கூடியது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சில நிமிடங்களில் லோக்சபாவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். மீண்டும் 12 மணிக்கு ராஜ்யசபா கூடி நடந்து வருகிறது. நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக, பகல் 2 மணிக்கு ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் கூச்சல் எழுப்பியதால், அவை 2மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவை தலைவர்கள் அறித்தனர்.

இதற்கிடையில்,  பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்  காங்கிரஸ் எம்.பி., ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.

கதற வைக்கும் கனவு தேசம்..