சென்னை: பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் (ஜனவரி 9ந்தேதி)  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை உள்பட பல பகுதிகளில் போதிய பேருந்துகள் இயங்காததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  ஆனால், அமைச்சரும், அதிகாரிகளும் 90 சதவிகிதத்திற்கு மேலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறி வருகிறது. மேலும், தொழிற்சங்கத்தினர்களில்   திமுக தொழிற்சங்கமான தொமுச, காங்கிரஸ் தொழிற்சங்கமான சிஐடியு போன்றவை கலந்துகொள்ளாமல், பேருந்துகளை இயக்கி வருகிறது.  அதுபோல திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளன.

இதற்கிடையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பேருந்துகளை இயக்கும் தொழிலாளர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், இன்றுமுதல் பேருந்து நிலையங்கள், பணிமனைகள் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதனால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படம் தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது, எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள். இன்று 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  நிலையில்,  போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.