டேராடூன்: உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் சமையல் சிலிண்டர் விலை ரூ.500ஐ தாண்டாது என்றும், இதுகுறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று சத்திஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகெல் உறுதி அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவதையொட்டி, அங்கு தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தரகாண்டில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது, மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. மாநில ஆட்சியாளர்கள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதால், கடந்த ஓராண்டுக்குள் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். சிலர் கட்சியை விட்டும் வெளியேறி உள்ளனர்.  அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வருகிறது.  அதேநேரம்,  இழந்த ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே உத்தரகாண்டில் உள்ள பாஜக அரசில் அமைச்சராக இருந்த ஹராக் சிங் ராவத் கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்டது அக்கட்சிக்கு இழப்பு என்று கூறப்பட்டு வரும் நிலையில்,  ஹராக் சிங் ராவத்  காங்கிரஸ் கட்சியில்  சேர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,  தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சி அமைத்தால் எல்பிஜி சிலிண்டர் விலை (சமையல் எரிவாயு சிலிண்டர்)  500 ரூபாயை தாண்டாது என்று உறுதியளிக்கிறோம் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்பாகேல்
டேராடூனில்  தெரிவித்து உள்ளார்.