மும்பை: எங்களது குழந்தை வாமிகாவின்  புகைப்படத்தை பகிர வேண்டாம் என  விராட் கோலி தம்பதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம்  அனுஷ்கா சர்மா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த  தம்பதிக்கு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வாமிகா என்று கோலி – அனுஷ்கா தம்பதி பெயர் சூட்டியது. இந்த குழந்தையின் படம் இதுவரை வெளியே தெரியாமல் இருந்து வந்தது.

கோலி – அனுஷ்கா தம்பதியினர்,  குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்போது முன்கூட்டியே குழந்தையை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் – கேமராமேன்களிடம் கோரிக்கை வைத்துவிடுவார்கள். அதனால், வாமிகாவின் புகைப்படம் பொதுமக்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியாமலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில், கோலி – அனுஷ்கா தம்பதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது முதல் முறையாக வாமிகாவின் முகத்தை காட்டினர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. சமூக வலைத்தளங்களில் பலர்  வாமிகாவின் புகைப்படம் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இநத் நிலையில், தங்களது மகள் வாமிகாவின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என இணையதளவாசிகளுக்கு விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் கூட்டாக  வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் இன்ஸ்டகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  எங்களுடைய மகளின் புகைப்படம் நேற்று மைதானத்தில் எடுக்கப்பட்டு பலராலும் பகிரப்பட்டதை உணர்ந்துள்ளோம். கேமரா எங்களைப் படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்விவகாரத்தில் நாங்கள் முன்பு வைத்த கோரிக்கைகள் அப்படியே உள்ளன.  வாமிகாவை யாரும் படம்பிடிக்க வேண்டாம், அவருடைய படங்களை வெளியிடவேண்டாம் என முன்பு என்ன காரணங்களுக்காகக் கோரிக்கை விடுத்தோமோ அதையே மீண்டும் விடுக்கிறோம்” நாங்கள் முன்பு அறிவித்தது போல வாமிகாவின் முகத்தை வெளியே தெரியாமல் பார்த்து வருகிறோம், இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. வாமிகாவின் புகைப்படத்தை பகிராமல் இருந்திருந்தால் நன்றி!” –  என்று பதிவிட்டுள்ளனர்.