சென்னை: ஆளுநர் தனது வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் இறையன்புவிடம், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ரிப்போர்ட் கேட்டுள்ளார். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் துறைச்செயலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில்,  “அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.  திட்டங்கள் செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானதுதான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும்” என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், ஆளுநர் அறிக்கை கேட்டது வரம்பு மீறிய செயல் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்துரு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டோமே தவிர, அதிபர் ஆட்சிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் அதிக அதிகாரங்களை வழங்கக் கூடிய வகையில் தான் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் மக்களவை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட பிரதமருக்கும், அமைச்சரவைக் குழுவுக்கும் தான் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவர், அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்படியும், ஆலோசனையின் படியும் தான் செயல்பட முடியுமே தவிர, நேரடியாகச் செயல்பட முடியாது.

குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரங்களைப் போல, மாநில அளவில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்தும் அரசமைப்புச் சட்டத்தால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆளுநரைப் பொறுத்தவரை அமைச்சரவையின் அறிவுரையின் படியும், ஆலோசனையின் பேரிலும் தான் செயல்பட முடியும். நேரடியாகச் செயல்பட முடியாது. பெயரளவில் நிர்வாக தலைமைப் பொறுப்பை ஆளுநர் ஏற்றிருந்தாலும், உண்மையான அதிகாரம் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவுக்குத் தான் இருக்கிறது.

இந்நிலையில், மாநில அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாகச் செய்தி வெளிவந்திருக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆளுநர் குடியரசுத் தலைவரின் நியமனத்தின் அடிப்படையில் பொறுப்புக்கு வந்தவரே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு பெற்றவர்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கும், அமைச்சரவைக் குழுவிற்கும் தான் இருக்குமேயொழிய ஆளுநருக்கு இருக்க வாய்ப்பில்லை. எனவே ஆளுநரின் தலையீடு உள்நோக்கம் கொண்டது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

1968 நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், 1969 ராஜமன்னார் குழு, 1968 சர்காரியா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்பட முற்படுவது வரம்பு மீறிய செயலாகும். தமிழக ஆளுநர் நியமனம் செய்யப்பட்டது முதல் அவர்மீது எழுப்பப்பட்ட சந்தேகங்கள் வலுப்பெறுகிற வகையில், அவர் தற்போது மாநில அரசுத் துறைகளின் செயல்பாட்டில் தலையிடுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது.

இத்தகைய தலையீடுகளின் மூலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு இடையூறாகவும், மத்திய பா.ஜ.க. அரசின் நலன்களைக் காக்கவும் முற்படுகிறார் என்று குற்றம்சாட்ட விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்றச் செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறாரோ? என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

அரசமைப்புச் சட்டத்தை வடித்துத் தந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள், ‘அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவையின் ஆலோசனையை மீறிச் செயல்படுவதற்கும் ஆளுநருக்கு உரிமையில்லை’ என்று தெளிவுபடக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த நிலையிலும் மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்படக் கூடாது.

மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்பட்டதால், உச்ச நீதிமன்றத்தால் அவரது நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதேபோல, தில்லி மாநில ஆளுநரின் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியதால் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்படாமல் தமது வரம்புகளை மீறி, உள்நோக்கத்தோடு செயல்படுவாரேயானால், அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே, ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க., தமிழக ஆளுநரின் நடவடிக்கையால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.

எனவே, கடந்த 6 மாதங்களாக மக்கள் நலத் திட்டங்களை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர, அரசுத் துறைகளின் செயல்பாடுகளில் தலையிடுகிற போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.