மும்பை

பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்கரே தீவிரவாத முகாம்களை அழித்தற்கு இந்திய ராணுவம் மட்டுமே பெருமை கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.    அந்த இயக்கத்தினர் மேலும் தாக்குதல் நடத்த எல்லைப்புறங்களில் உள்ள முகாம்களில்  பதுங்கி  இருந்தனர்.   இந்திய விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி முகாம்களை அடியோடு அழித்தது.

இது குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சி சிவசேனாவின் தலைவர் உதவ் தாக்கரே, :பாகிஸ்தானின் பயங்கர வாதிகள் தங்கி இருந்த முகாம்கள் அழிக்கப்பட்டதால் என் இதயம் பெருமையில் பொங்குகிறது.

இதை செய்த வீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்.  அதே நேரத்தில் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் மட்டுமே பெருமை கொள்ள வேண்டும்.  வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது” என தெரிவ்த்துள்ளார்.

அத்துடன் பாஜகவை விமர்சனம் செய்தபடியே அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு, “பாஜகவை சுற்றி நிறைய பேர் இருந்த போது நாங்கள் எதிராக இருந்தோம்.  ஆனால் அவர்கள் பாஜகவை ஏமாற்றியதால் நாங்கள் தற்போது ஆதரவாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.