புதுச்சேரி: தனது தந்தை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தனக்கு எந்த கோபமோ, வெறுப்போ இல்லையென்றும், அவர்களை மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில், மாணவிகளுடன் அவர் உரையாடியபோது, இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “யார் மீதும் எனக்கு கோபமோ அல்லது வெறுப்போ கிடையாது. நான் எனது தந்தையை இழந்தேன். ஆம்! அது மிகவும் கடினமான ஒரு சூழலாக இருந்தது.

எனது இதயத்தை குத்தி, தனியே வெளியே எடுத்ததுபோல் இருந்தது. மிகுந்த வலியும் வேதனையும் எனக்கு ஏற்பட்டது. ஆனால், நான் கோபமாக உணரவில்லை. நான் மன்னித்துவிட்டேன். எனது தந்தையை நான் எப்போதும் என்னுடன் சுமந்து செல்கிறேன்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வன்முறை எதையுமே உங்களிடமிருந்து எடுத்துச்சென்று விடாது. எனது தந்தை என்னுள் வாழ்கிறார். இன்று நீங்கள் என்னிடம் காணும் பல விஷயங்கள், என் தந்தையிடமிருந்து வந்தவைதான். எனது தந்தை என் மூலமாக பேசிக் கொண்டுள்ளார்” என்றார் ராகுல் காந்தி.