சென்னை

ஃபர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தமது படத்த்ல் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள் ஃபர்ஹானா திரைப்படத்தின் கதை ஒரு இஸ்லாம்ய குடும்பத்தின் கதை என்பதால் அதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்த படத்தில் இஸ்லாமியர்களை  தவறாக சித்தரிப்பதாக எழுந்த செய்தியால் நேற்று ஒரு  திரையரங்கில் ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் இப்பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர்,

“இந்த படத்தின் கதையை நான் பரிசுத்தமான மனதுடன் தான் அணுகினேன். நம்முடன் வாழக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களை சிறிதளவும் தவறாக காட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் அப்படிப்பட்ட இயக்குநர் கிடையாது. நேற்று ஒரு குறிப்பிடத்த திரையரங்கில் ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டது. சில ஊடகங்கள் இதை தமிழ்நாடு முழுவதும் ‘ஃபர்ஹானா’ படக்காட்சிகள் ரத்து என செய்தி வெளியிட்டிருந்தனர்.

எனக்கு இது மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் நல்ல படங்களை மட்டுமே இயக்குவேன் என வைராக்கியத்துடன் இருக்கிறேன். அத்துடன் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நல்ல படங்களை சமூக அக்கறையுடன் வெளியிடும் நிறுவனம் ஆகும். அப்படியிருக்கு தேவையற்ற சர்ச்சைகள், புரிதலில் இருக்கும் சிக்கல் காரணமாக வரும் திசை திரும்பும் முயற்சிகள் வருத்தமளிக்கிறது.

இன்றைக்கு வரும் படங்களில் ஆயுட்காலம் 2 முதல் 3 வாரங்கள் தான். சராசரி பார்வையாளர்கள் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக ‘ஃபர்ஹானா’ மாதிரியான படங்கள் உருவாக்கப்படுபவை.   இதில் நெருடலும் சர்ச்சையும் ஏன் வருகிறது என்றால் நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை தொட்டு படத்தை இயக்கிவிட்டேன் என்பதால் தான். எனது சகோதர, சகோதரிகளைப்பற்றி நான் படம் எடுக்காமல் யார் எடுப்பார்கள்.

இஸ்லாமிய சமூகத்தை பற்றிய நல்ல படங்கள் என்பது எனது ‘ஃபர்ஹானா’ படம் ஆரம்ப புள்ளியாக இருக்கட்டும். மற்ற படங்கள் வந்த நேரம் அதற்கான எதிர்மறை கருத்துகளும் என்னையும் அந்த புள்ளியில் வைத்து பார்க்கும் சூழலை உருவாக்கவிட்டது.  தயவு செய்து இஸ்லாமிய நண்பர்கள் படத்தைப் பாருங்கள்.  இதில் குறைகள் இருந்தால் நாங்கள் சரிசெய்ய தயாராக இருக்கிறோம். இனித் தமிழ் திரையுலகில் இஸ்லாமிய சகோதரர்களை சரியாக சித்தரிக்கும் படங்கள் வர வேண்டும். இதற்கு ஆரம்பமாக ‘ஃபர்ஹானா’ இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனவே உங்களின் ஒத்துழைப்பு தேவை”

எனத் தெரிவித்துள்ளார்.