டில்லி,

லைநகர் டில்லியில் இன்று 21வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று அவர்களை  அதிமுக அம்மா (சசி அணி) கட்சியை சேர்ந்த தம்பித்துரை சந்தித்து பேசினார்.

அப்போது,  விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தொழிலதிபர்கள் கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, உணவு தரும் விவசாயிகள் கடனை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும், நதிகளை இணைக்கவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. விவசாயிகளின் எண்ணத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும் என்றார்.

எனவே விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், தமிழக முதல்வர் டில்லி வந்து விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தம்பித்துரை, நான் வகிக்கும் துணை சபாநாயகர் பதவி எளிதான ஒன்றா? முதல் அமைச்சர் பதவிக்கு இணையான ஒன்று.  அதனால் முதல்வர் இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை.”

இவ்வாறு தம்பிதுரை கூறினார்.