இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வான்வழி சில மாதங்கள் மூடப்பட்டதால், அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறைக்கு ரூ.8.5 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து துறைக்கான அந்நாட்டு அமைச்சர் குலாம் சர்வார் கான் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “எங்கள் நாட்டு விமானப் போக்குவரத்து துறைக்கு ஒட்டுமொத்தமான அளவில் இது மிகப்பெரிய இழப்பாகும். அதேசமயம், வான்வழி மூடல் நடவடிக்கையால், பாகிஸ்தான் அடைந்த நஷ்டத்தைவிட, இந்தியா அடைந்த நஷ்டம் மிக அதிகமாக இருக்கும்.

எங்களுக்கு ஏற்பட்டதைவிட, அவர்களுக்கானது இருமடங்காக இருக்கும். எனவே, இதுபோன்ற சூழல்களில் இருநாடுகளுக்கு இடையிலும் சமாதனம் மற்றும் நல்லிணக்க சூழல்கள் நிலவுவது அவசியம்” என்றுள்ளார்.

புலவாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களால், இருநாடுகளும் தங்களின் வான் எல்லைகளை சிலகாலம் மூடி வைத்திருந்தன என்பது நினைவிருக்கலாம்.