கடந்த 2014ம் ஆண்டில் போலியான வாக்குறுதிகளிலும், 2019ம் ஆண்டில் போலியான பெருமையிலும் இந்தியா ஏமாந்தது என்று கூறியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பிரனாப் பர்தன்.

2019ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி அடைந்த வெற்றி என்பது நிச்சயம் ஒரு சாதனைதான். தனிப்பட்ட மனிதர் ஒருவரின் பிரச்சார யுக்தி மற்றும் பேச்சுத்திறன் (அவ்வப்போது விஷத்தை தோய்த்துப் பேசுவது) ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி என்றே எடுத்துக்கொண்டாலும், அவற்றில் வேறுபல துணை காரணிகளையும் கணக்கில்கொள்ள வேண்டும்.

மோடிக்கு இருந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவானது, மற்ற தலைவர்களின் பிரச்சாரம் பெற்ற முக்கியத்துவம் மற்றும் கவனத்தைக் காட்டிலும், அவரின் பிரச்சாரம் மிக அதிக கவனமும் விளம்பரமும் பெற உதவியது. மேலும், பல பிரபலமான பத்திரிகைகளை தமக்கு சாதகமாக மாற்றி வைத்திருந்ததால், அவர்கள் மோடியிடம் எந்தவித கடினமான கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து காப்பாற்றினர்.

மேலும், தொடர்ந்து ஊழலற்ற மனிதராகவே சித்தரிக்கப்பட்டார் மோடி. அவரின் ஆட்சியில் இந்திய நன்மதிப்பு சர்வதேச அளவில் மிகவும் குறைந்தபோதும், வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமை ஓங்குகிறது என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு மோடியால் வெற்றிபெற முடிந்தது. அவரின் ஆட்சியில் மோசமான வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில்துறை முடக்கம், வேளாண்மை சீர்கேடு போன்ற ஏராளமான அவலங்கள் நிறைந்திருந்தும், மக்களை தேசியவாதத்தின்பால் திருப்பி ஏமாற்ற முடிந்தது.

இந்திய அரசியல் சாசனத்தை புனித நூல் என்று கூறிய மோடி, அதை ஒருபோதும் மதித்ததில்லை. தனது முந்தைய 5 ஆண்டுகால ஆட்சியில் தொடர்ந்து அதனை பலவீனப்படுத்தவே செய்தார். கடைசியாக, பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் நடத்தியதாக சொல்லப்படும் புலவாமா தாக்குதல் மோடிக்கு பெரியளவில் கைகொடுத்தது.

ஆக, கடந்த 2014ம் ஆண்டில் இந்தியா போலி வாக்குறுதிகளால் ஏமாந்தது என்றால், 2019ம் ஆண்டில் போலி தேசியவாதத்தால் ஏமாந்தது என்றுள்ளார் கட்டுரையாளர்.