புதுடெல்லி: கிழக்கு டெல்லி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதிஷி குறித்த மிகவும் தரம்தாழ்ந்த வார்த்தைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தொகுதிக்குள் விநியோகித்த, அதே தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்த துண்டு பிரசுரங்களை ஊடகவியலாளர்கள் முன்பாக வெளியிட்டு பேசிய ஆதிஷி, மனம் உடைந்துபோய் அழுதுவிட்டார். தலைநகர் டெல்லியில் பள்ளிக் கல்வியை மறுவடிவமைப்பு செய்ததில் மிக முக்கியப் பங்கை வகித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என்னைப் போன்ற வலிமையான பெண் வேட்பாளரை தேர்தலில் தோற்கடிப்பதற்காக, இந்தளவு தரம்தாழ்ந்து போவதற்கு கம்பீரால் முடிகிறதென்றால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகி, பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வார்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஆதிஷி.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான சிசோடியா பேசும்போது, “நாட்டிற்காக இவர் விளையாடியபோது, இவருக்காக கை தட்டினோம். ஆனால், ஒரு தேர்தல் வெற்றிக்காக இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போவார் கெளதம் கம்பீர் என்று நாம் கனவிலும் நினைத்ததில்லை” என்றுள்ளார்.