அகமதாபாத்

வரும் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போடிட் நடைபெற உள்ளதால் ஓட்டல் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், துபாய், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மக்கள் வருவார்கள் என்பதால் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல் அறைகளின் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளன. தற்போது ஓட்டல் அறைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக அகமதாபாத்தில் உள்ள சிறந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.2 லட்சமாக வாடகை உயர்ந்துள்ளது. அதே வேளையில் நட்சத்திர ஓட்டல்கள் மட்டுமின்றி சாதாரண ஓட்டல்களும் கூட இதனைப் பயன்படுத்தி ஐந்து முதல் ஏழு மடங்கு வாடகையை உயர்த்தியுள்ளன. ஒரு இரவுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வாடகைவசூலித்து வந்த ஓட்டல்கள் ரூ.20 ஆயிரம் வரை வாடகையை உயர்த்தியுள்ளன.

இந்த வாடகை உயர்வு அகமதாபாத் நகரில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.