புது டெல்லி:

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார் மருத்துவமனைகள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகவும், அப்படி செய்யாத நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தது.


இதுகுறித்து, மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ப்ரீத்தி சூடான் எழுதிய கடிதத்தில், டயாலிசிஸ், இரத்தமாற்றம், கீமோதெரபி போன்ற முக்கிய சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு வருபவர்களை பல தனியார் மருத்துவமனைகள் சிக்கிச்சை அளிக்க தயங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த மருத்துவமனைகள், அந்த நோயாளிகளை கொரோனா பரிசோதனை செய்ய வற்புறுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது போன்ற முக்கியமான சேவைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அனைத்து சுகாதார வசதிகளும், குறிப்பாக தனியார் துறையில் உள்ளவர்கள் தொடர்ந்து சேவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் சேவைகளை வழங்குவதற்கு முன் கொரோனா சோதனைகளுக்கு வலியுறுத்தும் மருத்துவமனைகளில், தனிப்பட்ட பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதார வழங்குநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 20 அன்று மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தனது கடிதத்தில் சுட்டிகாட்டியுள்ள மத்திய சுகாதார செயலாளர் ப்ரீத்தி சூடான், குழந்தை சுகாதாரம், நோய்த்தடுப்பு, புற்றுநோய்க்கு சிகிச்சை மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் எந்த இடையூறு ஏற்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.