மதுரை:
கோயில் நிர்வாக நடைமுறையில் தலையிட விரும்பவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கண்டனூர் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தனிநபர் கோயிலுக்கு நன்கொடை அல்லது வேறு உதவி செய்தால் கோயில் சார்பில் அங்கீகரிக்க வேண்டுமா? வேண்டாமா? என்றும் கோயிலில் தனி நபருக்கு சிறப்பு மரியாதை தேவையா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிவகங்கை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிர்வாக நடைமுறையில் அறநிலையத்துறை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் பொதுநலன் கருதி ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். கோயில் கும்பாபிஷேகம் விழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என கண்டனூர் சேர்ந்த சின்னன் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜூலை 21-க்கு ஒத்திவைத்தது.