சென்னை: வருமான சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டது குறித்து ஜூன் 30-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகை பெற அந்தந்த தாசில்தாரர்களிடமிருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை பெற்று சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என்று  வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து கலெக்டர்களுக்கும் கடந்த ஜூன் 4ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யவும், அதற்கு தடை கோரியும்  தொடங்கப்பட்ட வழக்கில் எந்த காரணமும் குறிப்பிடாமல் சொத்து, வருமான சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சான்றிதழ் வழங்குவது ஏன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்பது தொடர்பாக வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.