சென்னை: அக்டோபர் 1ந்தேதி (நாளை)  முதல் குடிநீர் வரி கட்டணங்கள் பொதுமக்களிடம் இருந்து  ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கட்டணங்களை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில் செலுத்த வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 01.10.2023 முதல் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல்/காசோலை/வரைவோலைகளாக மட்டுமே செலுத்திட வேண்டும்.

இதற்காக அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும், பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் 01.10.2023 முதல் செயல்படாது.

குடிநீர் / கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாக பணம் செலுத்தலாம். UPI, QR குறியீடு மற்றும் Pos போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.