நெல்லை

மேலும் 2 நாட்களுக்குத் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கன மழை பெய்து வருகிறது.

கன மழை காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேலும் குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,

”தற்போதைய கனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை. வளிமண்டல சுழற்சியே காரணம். ஆனால் வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது இல்லை. அக்டோபர் 1 முதல் தற்போது வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 

நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது. 

நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்குப் பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் குமரிக்கடல், தென் மாவட்டம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.” 

என அறிவித்துள்ளார்.