திருப்பதி

கருட சேவையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

நேற்று இரவு திருப்பதி பிரமோற்சவ விழாவில் சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருப்பதி மலைக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் நிர்வாகம், ஆண்டாள் தேவிக்குச் சூட்டிய மலர் மாலைகள், இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.

பெரிய ஜீயர் மடத்தில், ஜீயர்கள் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடந்ததைத் தொடர்ந்து, மலர் மாலைகள், பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றை ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் தேவஸ்தான அர்ச்சகர்களிடம் ஒப்படைத்து அவர்கள் ஆண்டாள் மாலையை ஏழுமலையானுக்குச் சமர்ப்பித்தனர்.

இன்று காலை பிரமோற்சவத்தின் 5-வது நாள் என்பதால் மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுந்தருளி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்குக் கருட சேவையில் தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார். சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலில் கருட சேவையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது  பக்தர்கள் கோவில் முகப்பு முதல், பேருந்து நிறுத்தம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.  தேவஸ்தானம் பக்தர்களுக்குத் தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கருட சேவையை முன்னிட்டு திருமலைக்குப் பக்தர்கள் பைக்குகளில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   தற்போது கோவிலில் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது.