சென்னை: மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.  இதன் காரணமாக, இன்று கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதுடன், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும் விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் முல்லைத் தீவிற்கு (இலங்கை) அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. இது மேலும், மேற்கு திசையில் நகா்ந்து வலுவிழந்து, வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய மன்னாா் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.

இது  நேற்று ( ஜன. 11) அதிகாலை மேலும், வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதையொட்டிய மன்னாா் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.  நேற்று காலை 8.30 மணி அளவில் மேலும், வலுவிழந்தது.

இது  தற்போது,  தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதையொட்டிய மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.  இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஜன. 12) முதல் ஜன. 17 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

‘மஞ்சள்’ எச்சரிக்கை:

கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜன. 12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,  இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான பெய்யக்கூடும்.

[youtube-feed feed=1]