திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை   விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாக  கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பெய்து வரும், தொடர் கனமழையால் கேரளா தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  கோட்டயம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் புதிய மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, அரபிக்கடலின் மத்திய-கிழக்கு பகுதிகளில் கொங்கன்-கோவா கடற்கரைக்கு அருகில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால் கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை நீடிக்கும்.

இன்று,  திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நாளை  அக்டோபர் 1 – எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை 64.5 மிமீ முதல் 64.5 மி.மீ வரை மழை பெய்யும். 24 மணி நேரத்திற்குள் 115.5 மி.மீ. மழை பெய்யும் என்றும் எச்சரித்து, மஞ்சள் எச்சரிக்கை அறிவித்து உள்ளது.

அரபிக்கடல் கொங்கன்-கோவா கடற்கரை மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக வருகிற 2-ந்தேதி வரை கன மழை நீடிக்கும்  என்றும், அரபிக்கடலில் கேரள கடற்கரையை ஓட்டிய மேற்கு திசையில் இருந்து காற்று வேகமாக வீசும் என்றும்   மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்க ளுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்ப ட்டுள்ளது.

கேரளாவில் நடப்பு ஆண்டு  பருவமழைக்கான காலம்  இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கன மழை நீடித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல் நலனில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் சிறு அறிகுறிகள் தோன்றினாலும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும்,  வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஆலப்புழாவின் குட்டநாடு பகுதியில் 3 நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாகவும்  கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.