சென்னை: அடுத்த 6 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அதிகனமழைக்கான சிகப்பு நிற (ரெட் அலர்) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென்மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 306 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இந்தநிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே பகுதியில் தொடர்ந்து நீடிப்பதாகவும், காற்று உந்துதல் குறைந்ததால், அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக,  கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என்றும்,  தூத்துக்குடி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள், குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் கடலோரப் பகுதிகளுக்கு வரும் 27 ஆம்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் வருகிற 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.