சென்னை: கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இருந்தாலும் அவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்! தூர் வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காத வாறு தடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும். மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.