சென்னை

காவேரி மருத்துவமனையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.

கடந்த 12 அன்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14- ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் அவரை கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சுவலியால் துடித்தார்.

அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ கிராம் பரிசோதனையில் அவரது ரத்தக்குழாய்களில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.  அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயர் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அனுமதி பெற்றுக் கடந்த 15-ந் தேதி அங்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு இருதயநோய் சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து செந்தில் பாலாஜிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு சிகிச்சை செய்து வருகின்றனர். மருத்துவமனையின் 7-வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த அறுவை சிகிச்சை இரண்டு முதல் நான்கு மணி நேரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறையின் காவல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார் என கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.