டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஜனவரி 16ம் தேதி முதல் இதுவரை 6.11 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.

இந் நிலையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அவரது மனைவி ஆகியோர் இன்று செலுத்திக் கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானதே. தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி போட்ட பிறகு சில பேருக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை குறைக்க தடுப்பூசி பயன்பாடு தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.