இந்திய அணியில், எந்த சூழலிலும், எந்த இடத்திலும் களங்காமல் ஆடுபவர் என்று பெயரெடுத்தவர் கேஎல் ராகுல்.

கடந்த ஆஸ்திரேலிய தொடரில், ஒருநாள் போட்டிகளில் நன்றாக ஆடியவர், காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் ரிஷப் பன்ட் தன்னை பெரியளவில் நிரூபித்துவிட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் ராகுலுக்கு இடம் கிடைக்கவில்லை.

‍அதேசமயம், டி-20 தொடரில் இடம்பெற்றாலும், சோபிக்க தவறினார் ராகுல். ஆனாலும், ஒருநாள் போட்டிக்கான அணி பட்டியலில் இடம்பிடித்தார் என்றாலும், பிளேயிங் லெவனில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

ஏனெனில், விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் இருக்கிறார். ஆனாலும், ராகுலை கைவிட விரும்பாத இந்திய கிரிக்கெட் நிர்வாகம், பன்ட்டுக்கு ஓய்வளித்துவிட்டு, கேஎல் ராகுலுக்கு வாய்ப்பளித்தது.

அந்தவகையில், 5வது விக்கெட்டாக களமிறங்கிய கேஎல் ராகுல், தொடக்கத்தில் சுணக்கம் காட்டினார். பந்துகளை வீணாக்கினார். ஆனால், கடைசி கட்டத்தில், நெருக்கடியான நேரத்தில், கருணால் பாண்ட்யாவுடன் இணைந்து, சிறப்பாக விளாசி அரைசதம் அடித்தார்.

அவர், 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களை அடித்து, இந்தியா வலுவான நிலையை எட்ட உதவினார். இதன்மூலம், தனது இழந்த ஃபார்மை மீட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.

இவர் ஃபார்முக்கு திரும்பியதன் மூலம், இந்திய அணிக்கு இரண்டு சிறப்பான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் (பன்ட் & ராகுல்) கிடைத்துள்ளனர்.