ஆணவக் கொலை வழக்கில் இன்று இருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியிருப்பது, ஆணவக்கொலைகளை கட்டுப்படுத்த உதவும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

“திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த ஆணவ கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறதது.

மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டடதுதான் எங்களது  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்திய அரசியல் சட்டத்தில் இருந்தே மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்.

ஆனால் இந்த சாதிய ஆணவ கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருப்பது இங்கு காலம்காலமாக தொடர்கின்ற சாதிய ஆணவ கொலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும் என்கிற அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக நான் பார்க்கிறேன்.

ஆணவ கொலையில் ஈடுபடுவோர்களுக்கு இப்படிப்பட்ட மரணதண்டனை தான் வழங்கப்படும் என்று எச்சரிப்பதுபோல் மாண்புமிகு நீதியரசர் அப்துல் காதர் அவர்கள் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்பதும் ஒரு வகையிலே ஆறுதலை அளிக்கிறது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.