சென்னை: ஹஜ் புனித யாத்திரை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ்பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இந்தியப் பிரதமர் அவர்களுக்கு ஹஜ் யாத்திரை குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது,

2019 ஆம் ஆண்டில், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4500-க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னை யிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்தும் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் விமானம் ஏறும் இடமாக தற்போது கேரளாவில் உள்ள கொச்சி விமானநிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.

மேலும் இதுகுறித்து தனக்கு ஏராளமான  இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் கோரிக்கைகள் அளித்துள்ளன. அதை பரீசலித்து சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.