அலகாபாத்:  ஞானவாபி மசூதி வளாகத்தில்  உள்ள கோவிலில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,

மசூதி வளாகத்திற்குள் உள்ள  இந்து தெய்வங்களை வழிபடுவதற்கான உரிமையை கொடுப்பதால், மசூதியின் தன்மையை கோயிலாக மாற்றாது என தெரிவித்த நீதிபதி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு (ஏ.எஸ்.ஐ.) உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது (ஒசுகானா) என்றும் மசூதி நிர்வாகம் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி கோர்ட்டு ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள தரைகீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. வாரணாசி கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து பூஜை செய்ய அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்துக்கள்  வழிபடுவதால், மசூதியின் தன்மை மாறாது என்றும் குறிப்பிட்டுள்ளது.