சண்டிகர்:

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, டில்லி மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.

இந்நிலையில், ‘‘கைது செய்யப்பட்ட சாமியார் ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சுனரியா சிறை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்’’ என சிறைத் துறை அமைச்சர் கிருஷ்ணன் லால் பன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த விருந்தினர் மாளிகை சிறை வளாகத்தில் அமைந்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த மாளிகை சிறையாக செயல்படும். அவருக்கு சிறையில் விஐபி கைதி அந்தஸ்து வழங்கப்படும்’’ என்றார்.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இந்த சாமியார் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பரிகாரமாக தற்போது சாமியாருக்கு சிறையில் விஐபி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.