அஹமதாபாத்,

குஜராத்தில் பள்ளி மாணவர்களின்  மதிய உணவில் எலி செத்துக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உணவு பரிமாறும் முனபே கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

காந்தி நகர் மாவட்டத்திலிருக்கும் ஜாம்லா கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் நேற்று இச்சம்பவம் நடந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து ஆய்வு நடத்திய தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அமித் சவுத்ரி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பள்ளிக்கூடத்துக்கு மதிய உணவு வந்தபின்  அது பரிமாறும் நிலையில் இருந்தபோது பள்ளி நிர்வாகி ஒருவர் சாப்பாட்டின் ருசி அறிய சிறிது உணவு எடுத்து சாப்பிட முனைந்துள்ளார்.

அப்போது சாப்பிட்டில் எலியின் வால் இருந்ததை அவர் பார்த்ததாக  கூறினர். உணவில்  எலி வாலைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்,  உணவு வைக்கப்பட்டிருந்த பாத்திம் முழுவதையும் ஆராய்ந்தபோதுதான் எலி செத்துக்கிடந்தது தெரியவந்தது என அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் இந்தப்பள்ளியில் 242 மாணவர்கள் படித்து வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து, அருகிலுள்ள அரசுப்பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காந்தி நகர் மாவட்ட அரசுப்பள்ளிகளுக்கு மதிய உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மதிய உணவுத் திட்ட இயக்குனர் திரிவேதி, மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறார். விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான ஆட்சி குஜராத்தில் நடைபெற்று வருகிறது.