புதுடில்லி: 2020ம் ஆண்டு ஜனவரியில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலானது ரூ.1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல், 1 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து, ஜிஎஸ்டி மூலமான வருவாய், இரண்டாவது முறையாக ரூ.1.1 லட்சம் கோடி என்ற நிலையைத் தொட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் வசூலான தொகையைவிட, நடப்பு ஆண்டு ஜனவரியில் வசூலானது 12% அதிகமாகும். நடப்பு ஆண்டின் ஜனவரியில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 828 கோடி.

இதில், மத்திய ஜிஎஸ்டி வரியான சிஜிஎஸ்டி மூலமான வசூல், ரூ.20 ஆயிரத்து 944 கோடி. மாநில ஜிஎஸ்டி வரியான எஸ்ஜிஎஸ்டி மூலமான வசூல், ரூ.28 ஆயிரத்து 224 கோடி.

ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி வசூல் ரூ.53 ஆயிரத்து 13 கோடி மற்றும் கூடுதல் வரி வசூல் ரூ.8,637 கோடி.