சென்னை

மிழக அரசு சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிட்டுள்ளது

நாளுக்கு நாள் சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில், சென்னைக்கு செல்லும்போதும், சென்னையில் இருந்து செல்லும்போதும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகிறது.  இதுவே தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான நுழைவாயில் போன்ற பகுதி என்பதால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க அரசு முடிவு செய்துளது.  தமிழக சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் இந்த புதிய சாலையை அமைப்பதற்கு ரூபாய் 80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தம் (டெண்டர்) கோரியுள்ளது. இங்கு சாலை அமைக்கப்பட்டால் செங்கல்பட்டிற்கு முன்பாக மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து ஈசிஆரில் உள்ள பூஞ்சேரி வழியாக பெரும்பாலான வாகனங்களை திருப்பிவிட முடியும்.

மிகவும் குறுகலாக உள்ள இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சிரமமின்றி சென்னையை விட்டு வெளியே செல்லவும், மீண்டும் சென்னை திரும்பவும் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.