சென்னை: பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த அடிபலகை உடைந்து பெண் சாலையில் விழுந்த  விவகாரம் சர்ச்சையான நிலையில்,  அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்தின் இருக்கைக்கு அடியில் இருந்த  ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த விவகாரம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு பேருந்தின் ஓட்டையில் இருந்த இளம்பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் பல்வேறு பேருந்துகள், ஓட்டை உடைசலாகவே இருக்கின்றன. இந்த பேருந்துகளை செப்பனிட்டு, வர்ணம் பூசி, புதிய பேருந்துகள் போல மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். பல பேருந்துகளில் மழை காலத்தின்போது தண்ணீர் ஓழுங்கியது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுபோல பல பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி, சாலையின் நடுவிலேயே நின்று விடும் அவலங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சம்பவத்தன்று  சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் 59 தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்றில் ஏராளமான பயணிகள்  பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்த பேருந்து முறையாக பராமரிக்கப்படாத நிலையில், ஓட்டை உடைசலாகவே காணப்பட்டது. இந்த பேருந்து, அமைந்தகரை அருகே வந்துக்கொண்டிருந்த போது கடைசி இருக்கையின் கீழ் உள்ள பலகை திடீரென உடைந்து , பேருந்தின் தளத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. இந்த ஓட்டை வழியாக, அந்த  இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் கீழே விழுந்தார்.

இதுகுறித்து சக பயணிகள் சத்தமிட உடனே பேருந்து நிறுத்தப்பட்டு, அந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்ட பொதுமக்களும், பயணிகளும், திமுக அரசை கடுமையாக சாடினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதையடுத்து மாநகர பேருந்து அங்கே நிறுத்தப்பட்டது.  இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில்,  இந்த பேருந்தை பராமரிக்கும் பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,  அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்,  மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி “மகளிர் இலவசப் பேருந்து” என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை,

மக்கள் இவர்கள் ஆட்சியில் உயிர்பிழைத்து வாழ்வதே மாபெரும் சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய விடியா திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி.

தமிழ்நாடு முழுக்க இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமானப் பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன.

மக்களைப் பாதுகாப்புடன் உரிய இடத்திற்கு கொண்டுசேர்க்கும் வண்ணம், புதிய பேருந்துகள் வாங்கி, ஏற்கனவே உள்ள பேருந்துகளுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.