சென்னை

ஆளுநர் ஆர் என் ரவி தமிழக மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் உற்சாகத்தோடு பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மக்களுக்குத் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழில் பேசி காணொலி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொலியில்,

“பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா, அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீதான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  என்ற நமது சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடு இது. 

உலகெங்கிலும் உள்ள பாரத வாசிகள் மதம், மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாகத் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகளை வாங்க நாம் உறுதிமொழி எடுப்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்.” 

என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.