சென்னை: வாடகை தாய்மூலம் குழந்தை பெறும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே சட்டமன்றத்தில்  சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெயிட்டுள்ளது. அதில்,  வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த சமயத்தில்  தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

நிபந்தனைகள்:

வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து இருத்தல் வேண்டும்.

குழந்தை பிரசவித்த மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அக்குழந்தை பிறந்த நாளிலிருந்து விடுப்பு வழங்கலாம்.

இவ்விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் இந்த விடுப்பு அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.