சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள 490 கோவில்களுக்கு அரசு வழங்கி வந்த மானியத்தொகையை உயர்த்தி, அதற்கான காசோலைகளை கோவில் நிர்வாக ஆணையரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்படும் அரசு மானியத்தை உயர்த்தி அதற்கான காசோலைகளை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்கோயில் அலுவலர்களிடம் வழங்கினார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த செங்கோட்டை வட்டம் ஆகுய பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அப்பொழுது கன்னியாகுமரி தேவசம் போர்டு என்ற அமைப்பின் கீழ் 490 கோயில்களின் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. இக்கோயில்களுக்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு மானியமான 3 கோடி ரூபாய் கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தினை 3 கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி 22.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் 225 கோயில்கள் உள்ளன. இந்நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களின் பராமரிப்பு செலவுகளுக்கு, புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகத்தால், 35 கிராமங்களில் 35,500 ஏக்கர் நன்செய் நிலங்களும், பூஜை பத்து மானியம், உள்துறை சேவை மானியம் மற்றும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வரப்பெற்ற நிலையில், இந்த நிலங்கள் மூலம் சரியான வருமானம் வராத காரணத்தினால், அரசிடம் நிலங்களை ஒப்படைத்து அதற்கு பதிலாக பூஜை செலவுகளுக்காக 1.18 லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவிற்கு வழங்க 1897-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு வழங்கப்பட்டது.

இத்தொகை 30.11.2011 முதல் 1 கோடி ரூபாயாக உயர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு அரசு மானியத்தினை 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி 12.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தை 6 கோடி ரூபாயாக உயர்த்தியும், புதுக்கோட்டை கோயில் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக வழங்கப்படும் அரசு மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்தியும், அதற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுசீந்திரம் கன்னியாகுமரி கோவில் இணை ஆணையர் இரா.ஞானசேகர், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இணை ஆணையர் க.தென்னரசு மற்றும் செயல் அலுவலர் கோ.சரவணன் ஆகியோரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.