சென்னை: விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவிட்டு உள்ளது.

அரசு மற்றும் தனியார் விழாக்களில் சமீபகாலமாக  தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட பாடல்கள் இசைக்கப்படுகிறது. உணர்வுப்பூர்வமாக பாடப்பட வேண்டிய இந்த பாடல்கள், இயந்திர கதியாக பாடப்படுவதால், அதன் நோக்கம் சிதைக்கப்படு வதாக குற்றம் சாட்டுப்படுகிறது.

இதுகுறித்து, தமிழகஅரசு ஆலோசித்து புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில்,  சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

எனவே,  இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.