சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது. இதில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா  இன்று  (15.03.2022) காலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்  பங்கேற்று சிறப்புரையாற்றி தமிழ் மொழி  மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும் தமிழ் அமைப்பிற்கும் திங்களிதழுக்கும் என மொத்தம் 21 விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் 2022ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை மறைந்த மு. மீனாட்சிசுந்தரம் அவர்களுக்குரியதை அவரது மனைவி திருமதி வசந்தா அவர்களுக்கும்,

2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும்,

பெருந்தலைவர் காமராசர் விருது  முனைவர் குமரிஅனந்தன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும்  மகாகவி பாரதியார் விருது திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன் அவர்களுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், கம்பர் விருது திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது திரு. சூர்யா சேவியர் அவர்களுக்கும், ஜி.யு.போப் விருது  திரு. அ.சு. பன்னீர் செல்வன் அவர்களுக்கும், உமறுப்புலவர் விருது திரு நா. மம்மது அவர்களுக்கும், இளங்கோவடிகள் விருது திரு. நெல்லை கண்ணன் அவர்களுக்கும், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மறைமலையடிகளார் விருது திரு. சுகி. சிவம் அவர்களுக்கும்,  அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா.சஞ்சீவிராயர் அவர்களுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது திரு. ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும், 2020 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ.தனலட்சுமி அவர்களுக்கும்,

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக 2021ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது திரு. க. திருநாவுக்கரசு அவர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் 2021ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது  நீதியரசர் சந்துரு அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக இரண்டு இலட்சம் உரூபாய்க்கான காசோலையும்  தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்புச்  செய்யப்படவுள்ளது.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதினை பெறுபவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருதினைப் பெறுபவருக்கும் விருதுத் தொகையாக உரூபாய் ஐந்து இலட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பெறவுள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருதுத் தொகையான இரண்டு இலட்சம் உரூபாய்க்கான காசோலை,  தகுதியுரை, கேடயம், பொன்னாடையும்,

2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கி ஐந்து இலட்சம் உரூபாய்க்கான காசோலை,  தகுதியுரை, கேடயம், பொன்னாடை முதலியன வழங்கப்படவுள்ளன.

இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.