சென்னை:

50சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மருத்துவமனை டாக்டர்கள் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாக்டர்கள் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கடலூர் வேலன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் டாக்டர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி விடுத்தனர்.

மேலும் இதுகுறித்து பதில் அளிக்க மாலை நடைபெற இருக்கும் விசாரணைக்கு  சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதிகள்,  மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்றும், அத்தியாவசிய பணிகள் பராமரிப்புச் சட்டம் என்பதன் சுருக்கமே எஸ்மா ஆகும். ஆகவே அதை பயன்படுத்த சுகாதாரதுறை செயலாளருக்கு ஆலோசனை வழங்கியது.

அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட கால அவகாசம் கொடுங்கள் என்றும், மருத்துவர்கள் தொழிலாளர்கள் அல்ல, எஸ்மா பிறப்பிக்கப்பட்ட பின் போராட்டம் தொடர்ந்தால் சிறைத் தண்டைனை விதிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  2002ம் ஆண்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை எஸ்மா சட்டத்தின்மூலம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.