சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.  அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு தொடர்பான குறியீடு செய்யப்படாத ஆவணங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து, ஆவணங் களை அமலாக்கத்துறைக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போதும் அமைச்சராக இருந்தார். இவர்மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள், மிரட்டல் வழக்குகள் போடப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், அவர்மீது கொடுக்கப்பட்ட பல புகார்கள் வாபஸ் பெறப்பட்டன.

இருந்தாலும், கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அத்துறை யில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவில் 3 வழக்குகளை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், பணி வழங்குவதாக சோசடி செய்ததில் சட்டவிரோதமாக பணம் கை மாறியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 3 வழக்குகளின் ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மனு தள்ளுபடி செய்தது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அப்போது, அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படு கிறது. அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து செய்யபட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கு சம்மந்தமான ஆவணங்களை வழங்க மறுப்பது அமலாக்க பிரிவு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அந்த ஆவணங்களை வழங்க எந்த தடையும் இல்லை என்றும் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங் களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை வழங்கவோ, மறுக்கவோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யபடாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு காரணமாக, அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான நெருக்குதல் அதிகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியின்போது,  81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவர்களிடம் இருந்து 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தவிர மேலும் 2 மோசடி வழக்குகள் இவர் மீது தொடரப்பட்டன. மேலும் தேர்தல் சமயத்தில் மண்திருட்டு தொடர்பாக இவர் பேசியது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது.  பல புகார்கள் இவர்மீது இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், பழைய வழக்குகள் வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அதன்படி அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் உள்பட பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாறினால், ஊழல் பெருச்சாளிகளும் நிரபராதிகளாக மாறிவிடும் அவலம் தமிழ்நாட்டின் சாபக்கேடு போலும்…